Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

காரைக்காலில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம்: மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு

மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று காரைக்கால் வந்தார்.

காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு, மாவட்ட எல்லையான பூவம் பகுதியில், வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வரிச்சிக்குடி, காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்தார்.

பின்னர், காரைக்காலில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் வருகை குறித்து காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.துரை சேனாதிபதி செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிப்.28-ம் தேதி காரைக்காலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அமித்ஷா வருகையை முன்னிட்டு திருநள்ளாறு மற்றும் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளங்களை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

“காரைக்காலில் உள்ள மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்படும். என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் நிலவும் குறைபாடுகள் களையப்படும். காரைக்காலில் அமித்ஷா பங்கேற்கவுள்ள கூட்டத்தில் 15 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று செயல் வீரர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசியதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், வி.கே.கணபதி. நளினி கணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் செந்திலதிபன், அப்பு(எ)மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x