Published : 23 Feb 2021 07:36 PM
Last Updated : 23 Feb 2021 07:36 PM

இடைக்கால பட்ஜெட்; உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

இடைக்கால பட்ஜெட்டில், உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இதில், உயர்கல்வித்துறை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"தமிழ்நாட்டின் இளம் மக்கள்தொகை சார் ஆதாயத்தினையும், இளைஞர்களின் ஆற்றலையும், மனித வளமாக மாற்றுவதற்கு இந்த அரசு உயர்கல்வித் துறையின் மூலம் முக்கியமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் தற்போது 49 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும். 2018-19 ஆம் ஆண்டின் பாலின சமநிலைக் குறியீடு 0.97 ஆக உள்ளது. பெண்களுக்கு சமமான பள்ளி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல், 37 இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 3 அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 21 பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளையும் அரசு நிறுவியுள்ளது.

வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண சலுகை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது".

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x