Published : 23 Feb 2021 07:33 PM
Last Updated : 23 Feb 2021 07:33 PM

திரையரங்கு, சுற்றுலாவுக்கு அனுமதி: பவுர்ணமி கிரிவலத்துக்கு இல்லையா?- திருவண்ணாமலை பக்தர்கள் கேள்வி 

திருவண்ணாமலை 

திரையரங்குகள், சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைத் தினந்தோறும் வலம் வந்து ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கரோனா ஊரடங்கால் பக்தர்களின் கிரிவலத்துக்குத் தடை போடப்பட்டது. கடந்த ஆண்டு பங்குனி மாதம் முதல், தொடர்ந்து 11 மாதங்களாகத் தடை நீடிக்கிறது. சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்குக் கூட பக்தர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் இருந்து படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், பல்வேறு ஊர்களில் கோயில் விழாக்கள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், பவுர்ணமி கிரிவலத்துக்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனச் சிவ பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பவுர்ணமி கிரிவலம் என்பது சிறப்பு வாய்ந்ததாகும். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாகக் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களாக கிரிவலம் நடைபெறவில்லை. கரோனா தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல ஊர்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல், குறை தீர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுலாத் தலங்களிலும் மக்களைக் காணமுடிகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களிலும் மக்களின் கூட்டம் வழக்கம்போல் இருக்கிறது. ஆனால் கிரிவலத்துக்கு மட்டும் அனுமதி இல்லை.

கிரிவலம் செல்லும்போது மனதளவில் அமைதி ஏற்படுகிறது. 14 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்லும்போது, உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. எனவே, பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு, வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி வழங்கத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும்“ என்றனர்.

பவுர்ணமி கிரிவலத்தை நம்பி நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்கின்றனர். பக்தர்களின் மிதியடிகளைப் பாதுகாப்பது முதல் உணவு விற்பனை செய்வது வரை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து சாலையோர வியாபாரிகள் பிழைத்து வருகின்றனர். கிரிவலம் தடைப்பட்டுள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகள், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மாசி மாத பவுர்ணமி, வரும் 26-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்குத் தொடங்கி 27-ம் தேதி பிற்பகல் 2.42 மணி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x