புயல் நிவாரண நிதி; தகுதி இல்லாதவர்கள் பெற்ற 110 கோடி ரூபாய்: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

புயல் நிவாரண நிதி; தகுதி இல்லாதவர்கள் பெற்ற 110 கோடி ரூபாய்: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

புயல் நிவாரண நிதி 110 கோடி ரூபாயைத் தகுதியில்லாதவர்கள் பெற்றது மோசடி என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுத்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சமீபத்தில் தமிழக கடலோரப் பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

அந்த நிவாரண உதவிகளைத் தகுதியில்லாத பலர், தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களை மோசடியாகப் பெற்று, 110 கோடி ரூபாய் வரை நிவாரண உதவியைப் பெற்றுள்ளனர். இந்த மோசடி குறித்துப் புகார் தெரிவித்தபின், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட 32 கோடி ரூபாய் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மோசடியாக நிவாரண உதவியைப் பெற்றவர்களிடம் இருந்து தொகையைத் திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in