Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

டீசல் விலை ஒரே மாதத்தில் ரூ.12 உயர்வு; தமிழகத்தில் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் உயர்கிறது: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

டீசல் விலை கடந்த ஒரே மாதத்தில்லிட்டருக்கு ரூ.12 உயர்ந்துள்ளதால், சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் கலால் வரிஉயர்வு, மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை மேலும் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில்மட்டும் டீசல் லிட்டருக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. இதனால், அரிசி,பருப்பு, எண்ணெய், கோதுமை,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும்சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்தியமோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே லாரி தொழில்கள் முடங்கியுள்ளன. இதற்கிடையே, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லிட்டருக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. டீசல் விலையைக் குறைக்க, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாத சூழலில் சரக்கு லாரிகளின் வாடகைக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள சரக்கு வாகனங்களில் 20 சதவீத வாகனங்களுக்கு கர்நாடகாவில் டீசல் வாங்கப்படுகிறது. காரணம் அங்கு லிட்டருக்கு ரூ.2 குறைத்து விற்கப்படுகிறது.

அதேபோல், தமிழக அரசும் டீசல்விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தால் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய்கிடைக்கும். இந்த கோரிக்கையை முதல்வரிடம் நேரில் வலியுறுத்தஉள்ளோம். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துவரும் 26-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இதேபோல், மார்ச் 15-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாபாரிகள் சிலரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘தமிழகத்துக்கு பருப்பு, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அதிக அளவில் வெளி மாநிலங்களில் இருந்துதான் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், சரக்கு லாரிகளின்வாடகைக் கட்டணம் உயர்வதால், பொருட்களின் விலைக்கு ஏற்றவாறு10 சதவீதம் வரை விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் வாடகையும் உயர்வதால், அதன் விலையும் உயர வாய்ப்புள் ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x