Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 23-ம் தேதி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 12 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, தென்காசி மாவட்டம் சிவகிரி ஆகிய இடங்களில் 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விழுப்புரம் மாவட்டம் வானூரில் 5 செமீ, புதுச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, காரைக்காலில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x