Published : 03 Nov 2015 06:15 PM
Last Updated : 03 Nov 2015 06:15 PM
தென்காசியில் 7 மாதங்களுக்கு முன்பு மாயமான ஆசிரியை மற்றும் 10-ம் வகுப்பு மாணவனை 3 வாரத்தில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம், கடைய நல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். சிஆர்பிஎப் காவலராக உள்ளார். இவரது மகன் சிவசுந்தரபாண்டியன் (15), தென்காசியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 31.3.2015-ல் பள்ளிக்கு சென்ற அவன் வீடு திரும்பவில்லை. கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். ஆசிரியையால் என் மகன் உயிருக்கு ஆபத்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நெல்லை எஸ்.பி. ஆஜராகி, இந்த வழக்கை புளியங்குடி டி.எஸ்.பி. விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. மாணவரின் தாயார் சார்பில் வழக்கறிஞர் எம்.சுபாஷ்பாபு வாதிட்டார்.
புளியங்குடி டி.எஸ்.பி. வானுமாமலை நேரில் ஆஜ ராகி, இருவரையும் தேடி வருவதாகக் கூறினார். பின்னர் ஆசிரியை மற்றும் மாணவனை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!