Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியை கொலை செய்த இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியை கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குமரன் (30). இவருக்கும், ராச்ச மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா (25) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2014-ம் ஆண்டு குமரன் தனது மனைவி ரம்யாவை வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த குமரன் கடந்த 2016-ம் ஆண்டு ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி (26) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

2-வது திருமணத்துக்கு பிறகு அஞ்சலியுடன் ஏலகிரி கிராமத்தில் குமரன் வசித்து வந்தார். இந்நிலை யில், முதல் மனைவியை கொலை செய்த வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் பிப்.23-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்க இருந்தது.

இதற்கிடையே, முதல் மனைவி ரம்யாவின் தம்பி ராஜூ (28) என்பவர் நேற்று காலை குமரன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜூ தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமரனை வெட்ட முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க குமரன் அங்கிருந்து ஓடினார்.

ஆனால், அவரை விடாமல் விரட்டியராஜூ, குமரனை வெட்டி கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், துணை காவல் கண் காணிப்பாளர் தங்கவேலு, ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிமுத்து மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குமரன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, குமரனை வெட்டிய ராஜூவை ஜோலார்பேட்டை காவல் துறையினர் நேற்று பிற்பகல் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x