டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.3.2 கோடி வழங்குக: தமிழக அரசுக்கு கமல் வலியுறுத்தல்

கமல் | கோப்புப் படம்.
கமல் | கோப்புப் படம்.
Updated on
1 min read

டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 3.2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:

"ஒரு மொழி மேன்மையுற எடுக்கும் பல்வேறு முயற்சிகளுள் ஒன்று மேலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்வது முக்கியமானது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசு 10 கோடி ரூபாய் தானம் வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்தது. அதற்கு நானும்கூட நிதி வழங்கியிருந்தேன். ஹார்வர்டின் ஒரு தொடர்ச்சியாக டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி முன்னேற்றம் கண்டிருக்கிறது.

கனடாவில் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழர்களுக்கும், தமிழுக்கும் பலவித முன்னுரிமைகள் வழங்கும் நாடு கனடா. ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக அறிவித்து கனடா மக்கள் அதை வருடாவருடம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் முதல் இடத்தில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகம் கடந்த பல வருடங்களாக தமிழ் மரபைக் கொண்டாடி வருகிறது. டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வேகமாக முன்னேறியிருக்கிறது.

இதற்குத் தேவையான வைப்பு நிதி 3 மில்லியன் டாலர்கள். அங்கேயுள்ள தமிழ் மக்கள் ஏற்கெனவே 2.44 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டார்கள். இன்னும் தேவை 5 லட்சத்து 60 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. அதாவது, இந்திய மதிப்பில் 3.2 கோடி ரூபாய் மட்டுமே. ஹார்வர்டுக்கு பத்து கோடி வழங்கிய தமிழக அரசு, இந்தப் பெருமுயற்சிக்குத் தேவைப்படும் மீதி நிதியைக் கொடையாக வழங்க வேண்டும்.

193 வருடங்கள் பாரம்பரியம் மிக்க டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையும் தமிழ் இருக்கை, தமிழுக்கான ஆராய்ச்சிகளை உயரிய முறையில் நடத்தி தமிழின் தொன்மையையும், பெருமையையும் நிலைநாட்டுவதோடு, உலகின் பல்வேறு தமிழ் ஆய்வுகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை. இதற்குக் கிடைக்கும் வெற்றி தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in