Published : 22 Feb 2021 05:35 PM
Last Updated : 22 Feb 2021 05:35 PM

போராட்டத்தில் அரசு ஊழியர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

“அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அவுட் சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தரப் பணிகளை இல்லாமல் ஆக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குதல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பெறுதல் போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 19.2.2021 அன்று பெருந்திரள் முறையீட்டுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சென்னையில் குவிந்தனர். தங்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பதுதான் அவர்களது நோக்கம். அரசுத் தரப்பில் அவர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்ததில் பெண் ஊழியர் உள்பட 7 பேர் படுகாயமுற்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்படும் அளவுக்கு தடியடி நடத்தப்பட்டுள்ளது. போராட்டம் என்கிற ஜனநாயகச் செயல்பாட்டில் இறங்கியவர்கள் மீது காவல்துறையினர் இத்தகைய வன்தாக்குதல் நடத்தியது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். அரசின் அங்கமாக உள்ள அரசு ஊழியர்கள் மீதே அரசின் அணுகுமுறை இதுவாகும் என்றால் இதர சாதாரண உழைப்பாளி மக்கள் மீது அரசின் அணுகுமுறையினை விளக்க வேண்டியதில்லை. இம்மனித உரிமை மீறலுக்கு காரணமாக காவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏன் போராட்டக் களத்துக்கு வருகின்றனர் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய திட்ட ரத்து பற்றி அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழு, ஊதிய முரண்பாடுகளைக் களைவது சம்பந்தப்பட்ட சித்திக் குழு அறிக்கைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

ஊழியர்களின் பல கட்டப் போராட்டங்களின்போது அழைத்தும் பேசவில்லை. இந்த நிலையில்தான் பெருந்திரள் முறையீடு நடத்தப்பட்டது. எனவே, இதனை கவுரவ பிரச்சினையாகப் பார்க்காமல் தமிழக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பால்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x