Published : 22 Feb 2021 01:55 PM
Last Updated : 22 Feb 2021 01:55 PM

தமிழக மீனவர்களைத் தாக்கக் கூடாது; இலங்கையிடம் இந்தியா கண்டிப்பு: அன்புமணி ராமதாஸுக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை வசம் உள்ளன. மீனவர்களைத் தாக்கக் கூடாது என இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பாமக தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:

“நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்படுவதும் மத்திய அரசுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அதுகுறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

அன்புமணி ராமதாஸின் கேள்விக்கு விடையளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், 2019, 2020 ஆகிய இரு ஆண்டுகளில் 284 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 53 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2021 ஜனவரி மாதத்தில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் தூதரக நடவடிக்கைகளால் அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டு விட்டனர். இப்போது தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளன.

மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை அவ்வப்போது மீட்பதற்காக இலங்கை அரசுடன் மத்திய அரசு தூதரக வழியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மீனவர்கள் நலன் சார்ந்த இரு தரப்புப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று நடைபெற்றது. அதில் அனைத்துச் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஜன.18 அன்று தமிழக மீனவர்களின் படகுடன் இலங்கை கடற்படை படகு மோதியதைத் தொடர்ந்து அந்தப் படகு மூழ்கியதில் அதில் இருந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நமது தூதர் மூலமாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இலங்கை பொறுப்புத் தூதரை அழைத்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் குறித்த பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த நிகழ்வுகள் எதுவும் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் பதிலளித்தார்.

கரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களின் விவரம் குறித்தும் அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பினார். வெளிநாடுகளில் தவித்தவர்களில் எத்தனை பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விடையளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், ஜன.20 வரை மொத்தம் 36,11,373 பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 3,44,937 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்”.

இவ்வாறு பாமக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x