Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
‘‘நண்பர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்தின் சந்திப்பு அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று நாகர்கோவிலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். இதையொட்டி நாகர்கோவிலில் அக்கட்சி நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மக்களின் பொருளாதாரத்தை பற்றி மோடி சிந்திப்பதில்லை. சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று விட்டதால், சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுககூட்டணிக்கு கிடைத்துவிடாது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, இரண்டாவதாக ஒரு கல்லைகூட எடுத்து வைக்கவில்லை. இது அதிமுக அரசின் தோல்விக்கு சான்றாக அமைகிறது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் நண்பர்கள் என்பதால் அவர்கள் சந்திப்பது அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பிஎஸ்என்எல்- ன் காலை முறித்து ஜியோவுக்கு கொடுத்துள்ளார்கள். தமிழக காங்கிரஸ் செயற்குழு வரும் 24-ம் தேதி கூடுகிறது.
புதிய கட்சிகள் இல்லை
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை. எங்கள் அணியில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT