Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி: தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை

பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியில், கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற தனியார் நிறுவன ஊழியரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில், ஆவலப்பம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார்(34) பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 18 ம் தேதி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.2 லட்சத்தை, பொள்ளாச்சி-கோவை சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியில் கொடுத்து, நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட காசாளர், அதை ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார். அதில் சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் செல்வகுமரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் ரூ. 2 லட்சத்தை சோதனை செய்தனர். அதில் 28 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது. ரூ.14 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்த வங்கி மேலாளர், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தான் பணியாற்றும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தையே வங்கியில் செலுத்த வந்ததாகவும், அதில் கள்ள நோட்டுகள் கலந்துள்ளது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரூ.14 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x