Last Updated : 22 Feb, 2021 03:17 AM

 

Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

வங்கிகள் எடுத்த கடும் நடவடிக்கையால் தமிழகத்தில் குறைந்துவரும் வாராக் கடன்களின் அளவு

தமிழகத்தில் வங்கிகள் வழங்கும் முன்னுரிமை துறை கடன்களுக்கான வாராக்கடன் ரூ.4,303 கோடியாக குறைந்துள்ளது. வங்கிகளின் கடும் நடவடிக்கையால் வாராக்கடன் அளவு குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் அதனால் ஏற்படும் பொருளாதார மேம்பாட்டுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்தக் கடன் தொகை முறையாக திரும்ப வங்கிக்கு வராததால் அவை வாராக்கடன்களாகி பொருளாதார தேக்க நிலையை ஏற்படுத்தி விடுகின்றன.

இதையடுத்து வங்கிகள் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, வாராக்கடன் அளவு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, வங்கிகள் ஆபத்பாந்தவனமாக கடன் வழங்கி உதவி புரிகின்றன. வீடு, கல்வி, விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, சமூக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு வீடுகள் கட்டுவதற்கும் கட்டப்பட்ட வீடுகளை வாங்கவும் வழங்கப்பட்ட கடன் தொகையில், ரூ.1,056 கோடி திரும்ப வசூல் ஆகாமல் வாராக்கடனாக மாறி உள்ளன. அதேபோல், கல்விக் கடனில் ரூ.3,280 கோடியும் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.8,724 கோடியும் குறு சிறு மற்றும் நடுத்த தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.15,273 கோடியும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.8 கோடியும் மற்றும் பிற முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனையும் சேர்த்து மொத்தம் ரூ.28,714 கோடி வாராக் கடனாக உள்ளது. அதாவது, வழங்கப்பட்ட மொத்தக் கடன் தொகையில் 6.47 சதவீதம் ஆகும்.

இதற்கு முந்தைய ஆண்டு வாராக்கடன் ரூ.33,017 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை ஒப்பிடுகையில் தற்போது ரூ.4,303 கோடி குறைந்து உள்ளது. வங்கிகள் கடனை வசூலிக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது, வாராக்கடன் விவரங்களை சிபில் ஸ்கோர் பட்டியலில் சேர்த்தது, கடன் பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வாராக்கடன் அளவு குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் வாராக்கடன் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x