Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் அதிமுக பேனர் வைத்துள்ளதாக புகார்

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்களில் அதிமுக பேனர் வைத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ நேற்று புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

பெட்ரோல் டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அந்த இடத்தில், அதிமுகவினர் கொடிகம்பத்தினையும், பேனர்களையும் வைத்துள்ளனர். இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.

விழுப்புரத்தில் முதல்வர் வருகைக்காக, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் சாலைகளில் கட்சிக்கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கோயில் குளத்தை தூர்வாரி அம்மா பூந்தோட்ட குளம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஊழல் வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வரின் பெயரை பயன்படுத்தி வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும் எல்லாம் சீர்திருத்தப்படும். விழுப்புரம் மாவட்டம் முன்பு திமுக ஆட்சியில் வளர்ச்சியடைந்ததைப்போல், மிகப்பெரிய வளர்ச்சியடையும்.

வரும் 1-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி , மத்திய மாவட்ட திமுக சார்பில் கிளைகள் தோறும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்படும். இளைஞரணி, மாணவரணி சார்பில் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி, அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x