Published : 21 Feb 2021 02:24 PM
Last Updated : 21 Feb 2021 02:24 PM

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம்; ஒரிஜினல் முதல்வரை தேர்ந்தெடுப்போம்: செந்தில்பாலாஜி கிண்டல்

ஜெராக்ஸ் முதல்வர் வேண்டாம் ஒரிஜினல் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என தனது அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வி.செந்தில்பாலாஜி பவுண்டேஷன்ஸ் சார்பில் கரூர் திருகாம்புலியூரில் உள்ள தனியார் (ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக். மேல்நிலை) பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர் பானுமதி ஹோப் ஆப்கரூர் (கரூரின்நம்பிக்கை) என்ற இணையத்தளத்தை தொடங்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் பானுமதி உள்ளிட்ட 5 பெண் விண்ணப்பதாரர்கள், 5 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகியும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி எம்எல்ஏ பணிநியமன ஆணைகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:

மத்திய அரசுஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறியது. தற்போது ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலையை இழந்து வருகின்றனர்.

மாநில அரசோ காலியாக உள்ள லட்சகணக்கான பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் நெடுஞ்சாலைத்துறையில் 8 வழிச்சாலை அமைக்கும்பணியில் கவனம் செலுத்தி வருகிறது. ஏனென்றால் அதில் கமிஷன் கிடைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசு உரிமைகளை மத்தியஅரசிடம் அடமானம் வைத்துவிட்டது. தேர்தல் வருவதால் விளம்பரங்களுக்காக ரூ.250 கோடியை செலவிட்டு வருகிறது. இப்போது இருப்பவர் எதிர்க்கட்சி தலைவர் சொல்வதை செய்யும் ஜெராக்ஸ் முதல்வர். நமக்கு நகல் வேண்டாம். ஒரிஜிலான திமுகதலைவர் மு.க.ஸ்டாலினையே முதல்வராக தேர்ந்தெடுப்போம்.

இங்கு சொந்த உழைப்பில் முன்னேறியவர்கள் உள்ளனர். அடுத்தவர் உழைப்பில் முன்னேறியவர்களும் உள்ளனர். சொந்த உழைப்பில் முன்னேறுவதுதான் நிரந்தரம். அடுத்தவர் உழைப்பில் முன்னேறுவது கானல் நீராய் முடியும். மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் பானுமதிக்கு தற்போது பணியானை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மோட்டார்பொருத்திய 3 சக்கர வாகனம் வழங்கப்படும் என்றார்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள்பங்கேற்றன. 2,000த்திற்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்துகொண்டனர். நேர்முகத் தேர்வு மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனஆணைள் வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்றவர்களுக்குஉணவு, தண்ணீர், தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x