Published : 21 Feb 2021 10:18 AM
Last Updated : 21 Feb 2021 10:18 AM

சசிகலாவை நான் வரவேற்கவில்லை: ஆண்டிபட்டியில் மறுப்பு போஸ்டர் ஒட்டிய அதிமுக கிளை செயலாளர்

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியது நான் இல்லை என்று அதிமுக நிர்வாகி தற்போது ஆண்டிபட்டியில் மறுப்பு போஸ்டர் ஒட்டியுள்ளார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி. இங்கு அதிமுக கிளைச் செயலாளராக இருப்பவர் ஆர்.வேல்முருகன். ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியத்தின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் செயலாளராகவும் உள்ளார். மரிக்கண்டு ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருந்தார். அதில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும். அதிமுகவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சின்னம்மா என்று வரவேற்று போஸ்டர் ஒட்டியிருந்தார்.

இந்நிலையில் இவரது பெயரில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் 10 நாட்களுக்கு முன்பாக எனக்குத் தெரியாமல் எனது பெயரை பயன்படுத்தி சசிகலாவை கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வருமாறு போஸ்டர் அடித்து சிலர் ஒட்டியுள்ளனர். அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்று திருச்சி, நெல்லை போன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டாலும், ஆண்டிபட்டியில் தொடர்ந்து இதுபோன்ற போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டன. இதனால் சிலரை கட்சித் தலைமை பதவியில் இருந்தும் நீக்கியது. எனவே ஆண்டிபட்டி அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் போஸ்டர் ஒட்டவில்லை என்பதை விளக்கி மற்றொரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரவேற்பு போஸ்டர் ஒட்டியபோதே மறுப்பு தெரிவித்திருக்கலாம், இவ்வளவு நாள் கழித்து மறுப்பு போஸ்டர் ஒட்டியிருப்பது புதிராக இருக்கிறது என கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x