Published : 03 Nov 2015 07:49 AM
Last Updated : 03 Nov 2015 07:49 AM
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஆகியவை தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கள் ஜி.கார்த்திகேயன், எஸ்.சத்தியசந்திரன் உள்பட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெறும்போது பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஒரு வழக்கறிஞர் எத்தனை சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும், அவர் ஒரேயொரு சங்கத் தேர்தலில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, ஒரு வழக்கறிஞர், சங்க உறுப்பினராக சேரும்போது அவர் எந்த சங்கத்துக்கு வாக்களிக்க விரும்புகிறார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதனால், வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு வசதியாக, இச்சங்கத் தேர்தல் நடத்தப்படும் முறைகள் குறித்த விதிமுறைகளை வகுத்து சமர்ப்பிக்க வழக்கறிஞர்கள் குழுவை நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மறு உத்தரவு வரும்வரை அல்லது சங்க துணை விதிகளில் திருத்தம் செய்யும்வரை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஆகிய 4 வழக் கறிஞர்கள் சங்கங்கள் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப் படுகிறது. அதுவரை தற்போதுள்ள நிர்வாகிகளே சங்கப் பணிகளைத் தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT