Last Updated : 20 Feb, 2021 07:17 PM

 

Published : 20 Feb 2021 07:17 PM
Last Updated : 20 Feb 2021 07:17 PM

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் உண்மையை மறைப்பவர்களை நிராகரிப்பது தவறில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களை பணித்தேர்வில் நிராகரிப்பது தவறில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 88 அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை தேர்வு செய்ய 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததற்காக மங்கலநாதன் ஒரு ஆண்டுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்க தடை விதித்தும் டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காரன் விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான 2 வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றார்.

டிஎன்பிஎஸ்சி தரப்பில், விண்ணப்பிக்கும் போது, நேர்கானல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மனுதாரர் குற்ற வழக்கு இருப்பதை தெரிவிக்கவில்லை. தற்போது அவர் மீது வழக்குகள் இல்லாவிட்டாலும். விண்ணப்பிக்கும் போது வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த விபரத்தை விண்ணப்பத்தில் மறைத்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

டிஎன்பிஎஸ்சி விதிப்படி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான நிபந்தனைகள், விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை மாற்றவோ, தளர்த்தவோ உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

இதனால் குற்ற வழக்கு இருப்பதை விண்ணப்பத்தில் மறைத்த மனுதாரரின் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவு சரியானது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x