Last Updated : 20 Feb, 2021 06:42 PM

 

Published : 20 Feb 2021 06:42 PM
Last Updated : 20 Feb 2021 06:42 PM

தேவகோட்டை அரசு மருத்துவமனையில்  பகலில் கூட மருத்துவர்கள் இல்லாத அவலம்: மகப்பேறுக்குக் கூட தனியாருக்குச் செல்லும் கர்ப்பிணிகள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் பகலில் கூட மருத்துவர்கள் இல்லாத அவலநிலை உள்ளது. மகப்பேறு மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும்நிலை உள்ளது.

தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 12 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும்.

ஆனால் 6 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் காலையில் புறநோயாளிகள் பிரிவுக்கான பணி முடிந்ததும், ஒரு மருத்துவராவது தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.

ஆனால் புறநோயாளிகள் பிரிவு முடிந்ததும் அனைத்து மருத்துவர்களும் சென்றுவிடுகின்றனர். பகலிலேயே மருத்துவர்கள் இல்லாதததால் விபத்து, விஷக்கடி போன்ற அவசர சிகிச்சைக்கு வருவோர் காரைக்குடி, சிவகங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அதேபோல் செவிலியர்களும் போதிய அளவில் இல்லை.

மேலும் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் கூட இல்லை. அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மாற்றுப்பணி அடிப்படையில் வந்து செல்கிறார். இதனால் பெரும்பாலான கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனையை நாடும்நிலை உள்ளது.

இதுகுறித்து தேவகோட்டை காமராஜ் கூறுகையில், ‘‘

பிரசவத்திற்கு வருவோரில் பெரும்பாலானோரை காரைக்குடி, சிவகங்கை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் அலைச்சலை தவிர்க்க கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்கின்றனர். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனைத்து சிசிச்சைகளுக்கான வசதி இருந்தும், மருத்துவர்கள் இல்லாததால் வெளியூருக்கு அலைய வேண்டிய அவல நிலை உள்ளது,’’ என்று கூறினார்.

இதுகுறித்து மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறுகையில், ‘‘எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x