

புதுச்சேரியில் புதிதாக 29 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (பிப். 20) வெளியிட்ட தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,590 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 14 பேருக்கும் என மொத்தம் 29 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 662 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 95 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 93 பேரும் என 188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குமணடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 719 (97.85%) ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 17 ஆயிரத்து 198 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 117 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
மேலும், 8,051 சுகாதாரப் பணியாளர்கள், 407 முன்களப் பணியாளர்கள் என 8,458 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.