Last Updated : 20 Feb, 2021 04:34 PM

 

Published : 20 Feb 2021 04:34 PM
Last Updated : 20 Feb 2021 04:34 PM

உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் யு.ஜேக்காப், எஸ்.கலைச்செல்வி, பி.ராஜேஷ், டி.டி.ஜெயகுமாரி, எஸ்.ஏஞ்சல் சினேகலதா, எம்.பெலிக்ஸ் இசபெல்லா, இ.ஜான்சி, பி.ரெனிஷா, ஆர்.பாப்பா, எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த நாங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். அப்போது சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாததால் வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டோம்.

தமிழகத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 2020-ம் ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கரோனா காரணமாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிப். 15-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும்.

எனவே தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து, மூத்த தலைமை ஆசிரியர்கள் பலர் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு காத்திருக்கின்றனர். பொது இடமாறுதல் கலந்தாய்வின் போது தங்களுக்கு உரிய இடங்களுக்கு இடமாறுதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களை விட பணியில் இளையவர்களான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் போது தற்போது தலைமை ஆசிரியர்களாக இருப்பவர்கள் விரும்பும் இடங்களில் புதியவர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

இதனால் தற்போது தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். அடுத்த விசாரணை பிப். 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x