மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

பெற்ற மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் நாசர் (44). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். 11 வயதில் இருந்து மகளை பாலியல் ரீதியாக அப்துல்நாசர் துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறினால், அம்மா, தம்பி உட்பட அனைவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் உள்ள தனது தாத்தாவின் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த உறவினர்கள், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தந்தையால், தனக்கு ஏற்பட்ட கொடூரத்தை சொல்லி அழுதுள்ளார்.

கடந்த 21.09.2017 அன்று கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு உதகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது, மிரட்டியது உட்பட்ட பிரிவுகளின் கீழ் அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், அபராதத் தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in