Published : 20 Feb 2021 03:18 AM
Last Updated : 20 Feb 2021 03:18 AM

ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2-ம் கட்ட அகழாய்வுக்கு ஆயத்தப் பணி தொடக்கம்: முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் முதல் கட்டமாக அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 4 மாதங்கள் நடைபெற்ற இப்பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் கிடைத்தன.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 2-ம் கட்ட அகழாய்வுப் பணிநடைபெறும் என தமிழக தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆதிச்சநல்லூர், சிவகளையோடு சேர்த்து கொற்கையிலும் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகழாய்வுக்கான ஆயத்தப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு நடைபெறவுள்ள இடங்களில் உள்ள முட்செடிகளை வெட்டிசுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை ஆதிச்சநல்லூர், கால்வாய், புளியங்குளம், வீரளப்பேரி ஆகியஇடங்களிலும், சிவகளையில் மூலக்கரை, பேட்மாநகரம், சிவகளை பரம்பு, செக்கடி, ஆவாராங்காடு திரடு, பொட்டல்கோட்டை திரடு, பராக்கிரபாண்டி திரடு, வெள்ளத்திரடு, பேரூர் திரடு ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடங்களை சுத்தம் செய்து அகழாய்வுக்கு தயார்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x