Published : 19 Feb 2021 04:10 PM
Last Updated : 19 Feb 2021 04:10 PM

அரசு ஊழியர்கள் போராட்டம்; தலைமைச் செயலகம் முற்றுகை, திடீர் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது

தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அனைத்துச் சங்கங்கள் சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக ஊதிய மேம்பாடு, காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவேண்டும் எனக்கோரியும். அவுட் சோர்சிங் முறையில் ஆட்களை எடுப்பதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிப்பது. ஆட்குறைப்பு நடவடிக்கை, இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56- ஐ ரத்து செய்வது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர்.

27 ஆண்டுகளாக கோரிக்கைகள் நிரப்பப்படாமல் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த அவர்கள் சென்னையில் அனைத்துச் சங்கங்கள் சார்பில் கோட்டை நோக்கி முதல்வரைச் சந்தித்து மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அவர்களுக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே போலீஸார் இடம் ஒதுக்கியிருந்தனர்.

இன்று காலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு ஆவேசமாக கோஷமிட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகள் சிலரை மட்டும் போலீஸார் முதல்வர் ஊரில் இல்லாததால் தலைமைச் செயலரிடம் அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர். இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடுப்பை தள்ளிக்கொண்டு ஆவேசமாக கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல கடற்கரைச் சாலை நோக்கி செல்ல முயன்றனர்.

அவர்கள் போலீஸார் தடுக்க முயன்றும் முடியாததால் லேசாக தடியடி நடத்தி வலதுபுறம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் பக்கம் திருப்பி அனுப்பினர். இதனிடையே போராட்டம் நடத்தியவர்களின் ஒரு பிரிவினர் போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் நடத்துபவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வாய்ப்பிருக்கும் என்பதால் அங்கு மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதிரடி போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே திடீரென ஒரு தரப்பினர் வேகவேகமாக தலைமைச் செயலகம் வந்தனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக சேப்பாக்கம், போர் நினைவுச் சின்னம், கடற்கரைச் சாலை, தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகள் பரபரப்பாகவே காணப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x