Published : 19 Feb 2021 02:47 PM
Last Updated : 19 Feb 2021 02:47 PM

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பானதல்ல என அறிவிக்க கோரிய மனு; மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனாவை தடுக்க போடப்படும் 'கோவிஷீல்ட்' தடுப்பு மருந்தை பாதுகாப்பானதல்ல என அறிவிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனாவை தடுக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், லண்டனைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துடனும் சேர்ந்து 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளது.

இந்த மருந்து சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட தனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதால், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை பாதுகாப்பானதல்ல என அறிவிக்க கோரி, மருந்து பரிசோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர், தனது மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டு சோதனைக்கு ஆளான போது, 10 நாட்களுக்குப் பின் தலைவலி, தொடர் தூக்கம் போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, 16 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார்.

தனக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை இன்று (பிப். 19) விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவுக்கு மார்ச் 26-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மருந்து கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x