Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தினமும் 19 ஆயிரம்முதல் 20 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 90 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 33,414 பேர் முன்னிலை பணியாளர்கள், 22,639 பேர் காவல் துறையினர்.
3-ம் கட்டமாக முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுமத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14.8 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோவையில் ‘பெண்டவேலண்ட்’ என்ற தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை இறந்துள்ளது. மற்ற குழந்தைகள் நலமாக உள்ளன. குழந்தையின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நேற்று 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பூசியை 2-வது முறை போட்டுக் கொண்டால்தான் முழுமையான எதிர்ப்பு சக்தி உருவாகும். அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT