Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

அறநிலையத் துறை நிதியை பயன்படுத்தி தொலைக்காட்சி தொடங்க தடை கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க, இந்து சமய அறநிலையத் துறையின் பொது நிதியை பயன்படுத்த தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் விழாக்கள், அன்றாட நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக ரூ.8.77 கோடி மூலதன செலவில் ‘திருக்கோயில்’ என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரியும், அறநிலையத்துறையின் பொது நிதியைக் கொண்டு திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இண்டிக் கலெக்டிவ் என்ற அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வு கடந்த டிசம்பர் மாதம் விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “அறநிலையத் துறையின் பொது நிதியை கோயில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த விதிகளையும் பின்பற்றாமல் அறநிலையத் துறையின் நிதியைக் கொண்டு தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக எந்த ஆட்சேபங்களும் பெறப்படவில்லை” என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், “கோயில்களின் அன்றாட மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஒளிபரப்ப திருக்கோயில் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அறநிலையத் துறையின் நிதியில் இருந்து கோயில்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் பெற வேண்டும். இதே கோரிக்கை தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைகிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின்தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில் அறநிலையத் துறையின் நிதியில் இருந்து திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x