Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

தனியார் வங்கிக்கு கடன் செலுத்தாத திருமங்கலம் விவசாயி வீட்டுக்கு சீல்: தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்

கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயி வீட்டுக்குத் தனியார் வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதைக் கண்டித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மதுரை திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(49). இவரது மனைவி ரோகிணி. இவர் களது 2 மகள்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

சதீஷ்குமார் விவசாயக் கூலி வேலை செய்கிறார். கறவை மாடு வளர்ப்புத் தொழிலை மேற்கொள்ள 2018-ம் ஆண்டு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து கட்டி வந்த நிலையில், திடீரென சதீஷ்குமார் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார். மேலும் வாங்கிய 7 மாடுகளில் நான்கு மாடுகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். வங்கியிலிருந்து கடனை திருப்பிச் செலுத்தக் கூறி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வங்கி நிர்வாகத்தினர், சதீஷ்குமாரின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் குடும்பத்தினர் வீட்டின் வெளியே தங்கியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x