Last Updated : 18 Feb, 2021 06:22 PM

 

Published : 18 Feb 2021 06:22 PM
Last Updated : 18 Feb 2021 06:22 PM

தமிழகத்தில் கரோனாவால் மூடப்பட்ட அனைத்து நூலகங்களையும் திறக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழகத்தில் கரோனாவால் மூடப்பட்ட அனைத்து நூலகங்களையும் 4 வாரத்தில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை தத்தனேரியைச் சேர்ந்த சவுந்தர்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறையின் கீழ் சென்னையில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 32 மாவட்டங்களில் மத்திய நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் உள்ளன.

இவைகள் தவிர அரசு மருத்துவமனைகள், சிறைகள், பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் நூலகங்கள் செயல்படுகின்றன. பல கிராமங்களில் நூலகங்களில் தான் செய்திதாள்களைப் படிக்க முடிகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களுக்கு முன்பு நூலகங்கள் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகள் நூறு சதவீத இருக்கை வசதியுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுளு்ளன. நீச்சல் குளங்கள், மதுபானக் கூடங்கள் இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நூலகங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூலகங்களை திறந்தால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். நூலகங்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலகத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களையும் திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நகர் பகுதிக்ளில் உள்ள நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கிராமப்புற நூலகங்கள் முழுமையாக திறக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கிராமங்களில் உள்ள நூலகங்களே முக்கியமானவை. கரோனா தொற்று அதிகமாக இருப்பது நகர் பகுதிகளில் தான். அங்கிருக்கும் நூலகங்களை திறந்துவிட்டு, கிராமங்களில் உள்ள நூலகங்களை திறக்காமல் இருப்பது சரியல்ல.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரத்தில் திறந்து வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை வண்டியூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை திறப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x