Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த படவிழாவில், 53 நாடுகளில் இருந்து 91 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் 10 இந்திய மொழிகள் உட்பட 37 மொழிப்படங்கள் பங்கேற்கின்றன.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் மற்றும் பிவிஆர் நிறுவனம் இணைந்து, இந்த ஆண்டு 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள்) மற்றும் காசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்பட விழா சென்னையில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ படம் இன்று திரையிடப்பட உள்ளது. நிறைவு விழா திரைப்படமாக பிப்.25-ம் தேதி ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ என்ற படம் திரையிடப்படுகிறது.
தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’,‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 படங்கள் பங்கேற்கின்றன. இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வேர்டு’,‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன.
வெற்றி பெறும் திரைப்படங்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த பட விழாவின்போது, திரை மற்றும் இலக்கிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT