சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளுக்கு விருப்ப மனு: அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளுக்கு விருப்ப மனு: அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தகவல்
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளிக்க உள்ளதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொட்டப்பட்டு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகி யோர் கலந்து கொண்டு, பூமி பூஜையைத் தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கூறியது:

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்துக்குட்பட்ட 2 தொகுதிகளுக்கு நான் விருப்ப மனு அளிப்பேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஆற்றிய பணிகளையும், தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துக் கூறி தேர்தலைச் சந்திப்பேன்.

அதிமுகவில் கருத்து வேறுபாடு என்பதே கிடையாது. ஆதாயம் தேடும் நோக்கில் புல்லுருவிகள் சிலர் வேண்டுமென்றே அதிமுக வில் கருத்து வேறுபாடு உள்ள தாகக் கூறுகின்றனர். அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.

சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று அமமுக-வினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு, ‘‘அது அவர்களுடைய கருத்து. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in