Last Updated : 17 Feb, 2021 06:12 PM

 

Published : 17 Feb 2021 06:12 PM
Last Updated : 17 Feb 2021 06:12 PM

ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர் குளங்கள் தூர்வாரப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், வெள்ளூர் குளங்கள் தூர்வாரப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக காலை 10.30 மணியளவில் விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் சென்ற முதல்வர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க ரூ.55 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாத்தான்குளம் மணி நகரில் ரூ.7 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. கருமேனி ஆற்றின் குறுக்கே ரூ.7 ‌ கோடியில் உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கொங்கராயகுறிச்சி - கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ரூ.8.5 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. ஏரலில் ரூ.20 கோடியில் தாமிரபரணி குறுக்கே புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை அமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.9 கோடியில் 518 பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 954 வீடுகள் ரூ.16.25 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 61 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. எஞ்சிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆழ்வார்திருநகரி அருகே ரூ.26 கோடி மதிப்பில் தாமிரபரணி ஆற்றில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம் மற்றும் வெள்ளூர் குளம் தூர்வாரப்படும். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்படும். கொங்கராயகுறிச்சியில் உள்ள பழமையான சட்டநாதர் சிவன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர்.

இந்த இரு குளங்களும் தூர்வாரப்பட்டு சுமார் 150 ஆண்டுகளாகின்றன. தற்போது தூர்வாரப்படும் என்ற முதல்வரது அறிப்பை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற முதல்வர் அங்கு மகளிர் குழுவினர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூர் அருகே உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆலந்தலையில் ரூ.52 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1.20 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ளது. புன்னக்காயலில் தூண்டில் வளைவு பணி தொடங்கப்படவுள்ளது. மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுபோல சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்துள்ளோம். முருக பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார் முதல்வர்.

தண்ணீர் தான் குடிக்கிறேன்

ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு இருமல் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், நான் தண்ணீர் தான் குடிக்கிறேன். முதல்வர் சத்தான பால் குடித்தார் என சொல்லிவிட வேண்டாம். நான் கிராமத்திலிருந்து வந்தவன். தொண்டை வறட்சி காரணமாக தண்ணீர் தான் குடித்தேன். எனவே முதல்வர் தண்ணீர் குடித்தார் என டிவியில் போடவும் என நகைச்சுவையாக கூறினார்.

திருச்செந்தூர் வந்த முதல்வருக்கு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி, அங்குள்ள சிவந்தி ஆதித்தனார் முழுவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல்வரை வரவேற்று அவர் சென்ற இடமெல்லாமல் டிஜிட்டல் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து விளம்பர பதாகைகளிலும் முதல்வர் பழனிச்சாமி விவசாயி கெட்டப்பில் இருந்த புகைப்படமே அதிகமாக காணப்பட்டன. முதல்வர் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐஜி முருகன், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x