

பொள்ளாச்சி நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை விரிவாக்கப் பணிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, “சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரும்பிய கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி செய்கிற இடத்தில் முதல்வர் பழனிசாமி இல்லை. முதல்வருக்கு அறிவும் ஆற்றலும் இருப்பதால் மக்களுக்கான திட்டங்களை அறிவித்துவருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற ஜுரமும் நடுக்கமும் வந்துவிட்டது” என்றார். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் உடனிருந்தார்.