

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பெத்தேல்புரம் அருகே கூட்டு விளையை சேர்ந்தவர் சின்னதம்பி (55). பல இடங்களில் வயல்களை குத்தகைக்கு எடுத்து இவர் வாழை விவசாயம் செய்து வந்தார்.
கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடனிலிருந்து மீளமுடியாமல் சிரமம் அடைந்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் கூறி கவலைப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிச் சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிச்சென்ற போது, அப்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் கல்லறை மீது சின்னதம்பி இறந்து கிடந்தார். தகவலறிந்த குளச்சல் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சின்னதம்பி விஷம் அருந்தி தற்கொலை செய்திருப்பது தொிய வந்தது. இந்தச் சம்பவம் கூட்டுவிளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.