Published : 16 Feb 2021 05:40 PM
Last Updated : 16 Feb 2021 05:40 PM

அண்ணா பல்கலை - எம்.டெக் படிப்புகள்: இந்த ஆண்டு மாநில இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்ட 2 எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தலாம். அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றலாம் என உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி பி.புகழேந்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள் என்றும், இந்தப் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதேபோல, இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றலாம் என யோசனை தெரிவித்த நீதிபதி, 45 மாணவர்களைச் சேர்ப்பதால் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு திசைமாறிச் செல்வதாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டால் அது பல்கலைகழகத்தை இக்கட்டான சூழ்நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்றும், எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது குறித்தும் பிப்ரவரி 18-ம் தேதி அனைத்துத் தரப்பினரும் விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x