Published : 16 Feb 2021 05:12 PM
Last Updated : 16 Feb 2021 05:12 PM

விஷால் நடித்த சக்ரா படம் வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சக்ரா படத்தை வெளியிட தடை கோரி படத்தயாரிப்பாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து, விஷால், இயக்குனர் ஆனந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவிந்திரன் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்து, அதை படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

தன்னிடம் சக்ரா படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் இந்த படம் உருவாக்கி உள்ளது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் ரவீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரவிந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் சக்ரா படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனையேற்ற நீதிபதி கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு குறித்து நடிகர் விஷால், படத்தின் இயக்குனர் ஆனந்த் ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x