Last Updated : 16 Feb, 2021 04:26 PM

 

Published : 16 Feb 2021 04:26 PM
Last Updated : 16 Feb 2021 04:26 PM

நாகர்கோவில் அருகே தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை: தீராத நோயால் மகன் அவதி; சோகம் தாங்காமல் விபரீத முடிவு

நாகர்கோவில் அருகே மனைவி, மற்றும் இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சூரங்குடியை அடுத்துள்ள சுண்டப்பற்றிவிளையை சேர்ந்தவர் கண்ணன்(42). மரதச்சு தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி(38). இவர்களுக்கு அனுஷ்கா(11), விகாஷ்(5) என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

இதில் விகாசுக்கு சளி, மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினை பிறந்தது முதல் இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் இழுப்பு, மூச்சுத்திணறலால் விகாஷ் சிரமம் அடைந்ததை பார்த்து கண்ணனும், அவரது மனைவியும் மனவேதனை அடைந்துள்ளனர்.

பல மருத்துவமனைகளில் அதிக அளவில் பணம் செலவு செய்து மகனுக்கு கண்ணன் மருத்துவம் பார்த்துள்ளார். ஆனால் 5 வயது ஆன பின்பும் உடல்நலம் சீராகவில்லை.

மரவேலையில் கிடைக்கும் பணத்தை செலவு செய்ததுடன், பலரிடம் கடன்வாங்கியும் மருத்துவம் பார்த்துள்ளார். இதனால் கடன் தொல்லையாலும் கண்ணன் சிரமம் அடைந்துள்ளார். இந்நிலையில் மனவேதனை அடைந்த கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துள்ளார்.

நேற்று இரவு தூங்கச் செல்லும் முன்பு மனைவி சரஸ்வதி, மகள் அனுஷ்கா, மகன் விகாஷ் ஆகியோருக்கு விஷம் கொடுத்துள்ளார். அதை அவர்கள் அருந்தியுள்ளனர். பின்னர் கண்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷம் குடித்த மனைவி, இரு குழந்தைகளும் சம்பவ இடத்தில் இறந்தனர். இன்று காலை வெகுநேரமாக வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது 4 பேரும் இறந்து கிடப்படை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து ஈத்தாமொழி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு வந்து கண்ணன், மற்றும் அவரது மனைவி, இரு குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈத்தாமொழி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சுண்டப்பற்றிவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x