Published : 16 Feb 2021 04:37 PM
Last Updated : 16 Feb 2021 04:37 PM

தூத்துக்குடி சாலை விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு: முதல்வர் பழனிசாமி இரங்கல்; தலா ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

சென்னை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள மணியாச்சி கிராமம் அருகே இன்று காலை சிறிய வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்ததில் 6 பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பு:

“திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற தனியார் வாகனம், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி கிராமம் அருகே இன்று (16.2.2021) காலை கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்ததில், வாகனத்தில் பயணம் செய்த கலைசெல்வன் என்பவரின் மனைவி பேச்சியம்மாள், சுடலை என்பவரின் மகள் ஈஸ்வரி, கணேசன் என்பவரின் மனைவி மலையழகு, மனோகரன் என்பவரின் மனைவி பேச்சியம்மாள், வேலு என்பவரின் மனைவி கோமதி ஆகிய ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x