Last Updated : 16 Feb, 2021 04:41 PM

 

Published : 16 Feb 2021 04:41 PM
Last Updated : 16 Feb 2021 04:41 PM

கோவை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களில் 37 பேருக்கு பாம்புக் கடிக்கு சிகிச்சை: முதலுதவிகள் குறித்து பொது மருத்துவத்துறை தலைவர் விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பாம்பு கடித்த 37 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:

"பாம்புக் கடி குறித்த பல தவறான நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்பு வைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே அறிவியல்பூர்வமான நிரூபிக்கப்படாத முதலுதவிகள்.

பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும். அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் அங்கே அழைத்துச் செல்லலாம். தற்போது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக் கடிக்கான விஷமுறிவு மருந்துகள் கிடைக்கின்றன. அங்கு சிகிச்சையை முதலில் எடுத்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரலாம்.

இங்கு அழைத்து வரப்படுபவர்களில் பெரும்பாலானோர் நாகப்பாம்பு, கட்டுவிரியன், சுருட்டை பாம்பு கடித்து அழைத்து வரப்படுகின்றனர். நாகப்பாம்பு கடித்தால் அதன் விஷம் வேகமாகப் பரவக்கூடியது. அந்த விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, சுவாச மண்டலத்தை நிறுத்திவிடும். எனவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் தாமதம் இறப்புக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

கோவையைப் பொறுத்தவரை விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் என இரண்டு வகை பாம்புகள் கடித்து அழைத்து வரப்படுபவர்கள் சரிபாதி உள்ளனர். விஷமில்லாத பாம்பு கடித்தால் கடித்த இடத்தில் இரண்டு புள்ளிகள் தெரியும். ரத்தம் உறைவுத் தன்மை இயல்பாக இருக்கும். விஷமுள்ள பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் ரத்தம் வெளியேறும். ரத்தம் உறைவுத் தன்மை குறைந்துவிடும். சில நேரங்களில் அதிக ரத்த உறைவுத் தன்மை ஏற்பட்டு, இதயம், மூளை, சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

முதலில் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்த இடத்தில் சோப்பு, டெட்டால் போட்டுக் கடித்த இடத்தைக் கழுவிவிடலாம். பாம்பு கடித்த இடத்துக்கு மேல் கட்டுப் போடுவதால் பெரிய பலன் இருக்காது. ஏனெனில், உடலின் உள்ளே இருக்கும் ரத்தக்குழாயில் ரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

பாம்பு கடித்தவரை நடக்கவோ, ஓடவோ விடக்கூடாது. அவரை அப்படியே படுக்கவைத்து உடல் அசையாமல் மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டும். உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிவிடும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையக் கூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரித்தாலும் விஷம் பரவிவிடும். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவருக்கு தைரியமூட்ட வேண்டும். எந்த அளவுக்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அந்த அளவுக்கு அவரை நாம் காப்பாற்றலாம்.

எந்தப் பாம்பு கடித்தது என்பது தெரிந்தால் அதற்கேற்ற சிகிச்சை கொடுக்க முடியும் என்பதால், சிலர் கடித்த பாம்பை அடித்து எடுத்துவந்து விடுகின்றனர்".

இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x