கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த பெருந்திரள் முறையீட்டில் பங்கேற்ற போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த பெருந்திரள் முறையீட்டில் பங்கேற்ற போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள்.

63 மாதங்களாக பஞ்சப்படி உயர்வு இல்லை: கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பெருந்திரள் முறையீடு 

Published on

63 மாதங்களாக பஞ்சப்படி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 63 மாதங்களாக பஞ்சப்படி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து திருச்சி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் அதன் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு இன்று (பிப்.16) நடைபெற்றது.

மாவட்டத் துணைச் செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன், சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி, சேலம், கோவை, மதுரை, ஈரோடு ஆகிய கோட்டங்கள் மற்றும் மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர், மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அமலாக்குகின்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அமலாக்கம் செய்ய வேண்டும், போக்குவரத்துக் கழக ஓவூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்துப் பணப்பலன்களும் உடனடியாக வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் பெருந்திரள் முறையீட்டில் வலியுறுத்தப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in