

பிப்.23-ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்க உள்ளதை அடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, கலைவாணர் அரங்கில் போதிய இடைவெளியுடன் பேரவை நடத்தப்பட்டது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டத்தொடர் முழுவதும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். அதனால் எதிர்க்கட்சிகள் இன்றிக் கூட்டம் நடந்தது.
அலுவல் ஆய்வுக் குழுவில் பிப்.5 வரை பேரவையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. பிப்.3-ம் தேதி அன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்டோர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 4-ம் நாள், 5-ம் நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அறிவிப்புகளும் வெளியாகின.
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் தள்ளுபடி, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடப்படாமல் பேரவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இடைக்கால பட்ஜெட்டுக்காக மீண்டும் பேரவை கூட வாய்ப்புள்ளது என்கிற நிலையில், பிப்.23 அன்று சட்டப்பேரவை கூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பேரவைச் செயலர் சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் நாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என்று கூட்டப் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 23-ம் நாள் செவ்வாய்க்கிழமை 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும்”.
இவ்வாறு பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.