Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

பயனளிக்காத தமிழக அரசை அனைவரும் தூக்கி எறிவோம்: தொப்பூரில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேச்சு

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி பேசினார்

தருமபுரி

யாருக்கும் பயனளிக்காத நிலையில் உள்ள இந்த ஆட்சியை அனைவரும் தூக்கி எறிவோம் என்று தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.

தருமபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள், தொப்பூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஆகியவை நேற்று நடந்தது. தொப்பூர் கிராம சபைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியது:

இந்த ஆட்சியில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. பட்டா கொடுக்கப்படுவதில்லை. குடிநீர் வசதி செய்து தரப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகள் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் குறித்த மனுக்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக சென்று பெற்றுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த, முதல் 100 நாளில் அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அவர் மனு பெறுவதைப் பார்த்ததும் தமிழக அரசு தற்போது புதிய எண் ஒன்றைக் கொடுத்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு, திமுக தலைவர் மக்களிடம் குறைகேட்கத் தொடங்கிய பிறகு தான் அக்கறை காட்ட வந்துள்ளது. இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். திருமண உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை போன்றவையும் வழங்கப்படுவதில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் கொடுத்து வருகிறார் என்று தமிழக முதல்வர் கூறுகிறார்.

மக்களிடம் அறிவிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும். அதிமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் செயல்பாடற்ற நிலையில் உள்ளது. எனவே, பெண்கள் வெளியில் கடன் பெற்று தவித்துக் கொண்டுள்ளனர். சிப்காட் கொண்டு வரப் படாததால் வேலை வாய்ப்புக்காக மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் தவிக்கின்றனர். தருமபுரி சிப்காட் உட்பட தமிழகம் முழுக்க பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

உயர் கல்வித்துறை அமைச்சர் தருமபுரியைச் சேர்ந்தவர். ஆனால், தமிழகத்திலேயே கல்வியில் பின் தங்கிய மாவட்டம் தருமபுரி தான். திமுக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணி செய்ய போராடும் நிலைதான் தற்போதைய அரசில் நிலவுகிறது. மேட்டூர் குடிநீர் திட்டம் தருமபுரி மாவட்டத்துக்கு பயனளிக்கும் வகையிலும், தொப்பையாறு அணை நீர் பாசன தேவைகளுக்கு கிடைத்திடவும் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யும் நிலை திமுக ஆட்சியில் மாற்றப்படும். அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே மருத்துவர் பற்றாக்குறை இருக்கும்போது, புதிதாக 2000 மினி கிளினிக்குகள் தேவையா? இப்படி நமக்கு பயனற்றதாக இங்கே ஓர் ஆட்சி நடைபெறுகிறது. பயனற்ற பொருளை தூக்கி எறிவது போல இந்த ஆட்சியையும் தூக்கி எறியுங்கள். திமுக-வை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளரான எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் மக்களை உறுப்பினர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x