

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன், அவரது மனைவி சண்முகவள்ளி ஆகி யோர், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன்(72). கிழக் குத் தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றிபெற்று 2 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.
இவர், மதுரை பொன்னகரம் பிராட்வே பகுதியில் மனைவி சண்முகவள்ளியுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர்களது மகன்கள் குணசேகரன், ராஜ சேகரன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு நன்மாறன், அவரது மனைவி சண்முகவள்ளி வந்திருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் சண்முகவள்ளி கோரிக்கை மனு அளித்தார். அதில், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தார். எங்களுக்கு சொந்தவீடு இல்லை. எனவே, ராஜாக்கூர் கிராமத்தில் வழங்கப்படும் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் எங்களுக்கு கீழ்த்தளத்தில் ஒரு வீடு ஒதுக்கித் தர வேண்டுகிறேன் என குறிப் பிட்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் கூறிய தாவது: மார்க்சிஸ்ட் கட்சியில் நகரக்குழு உறுப்பினராக உள் ளேன். தமுஎகசவில் மாநில துணைத்தலைவராக உள்ளேன். எனக்கு வரும் ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தை கட்சியிடம் வழங்கிவிடுவேன். கட்சி சார்பில் ஊதியமாக ரூ.11 ஆயிரம் வழங் கப்படுகிறது.
அதில் வாடகையாக ரூ.6 ஆயிரம் செலவாகிவிடும். எனவே, எனது மனைவி ராஜாக்கூர் கிராமத்தில் பிரதமரின் அனை வருக்கும் வீடு திட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கீழ்த்தளத்தில் வீடு ஒதுக்கி தருமாறு மனு அளித் துள்ளார் என்று கூறினார்.