

மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர்(பொ) ஆ.சிவகாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் பட்டதாரி இளைஞர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள்) போட்டித் தேர்வில் கலந்துகொள்ள சிறப்புp பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை மீன்வளத் துறையின் இணையதளமான (www.fisheries.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் ராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் கட்டணமின்று நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மீன் துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 19-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை மீன்வளத்துறை உதவி இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் (பொ) ஆ.சிவகாமி தெரிவித்துள்ளார்.