Published : 15 Feb 2021 11:47 AM
Last Updated : 15 Feb 2021 11:47 AM

தமிழகத்தில் குளிர்பதனக் கிடங்குகள்; தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் அமைக்கப்படுகிறது: வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதில்

அழுகும் பொருட்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் குளிர்பதனக் கிடங்குகள் முழுமையும் அரசுப் பொறுப்பில் அமைப்பதில்லை. தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர்களின் தேவைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் ராமேஸ்வர் பதிலளித்துள்ளார். வைகோவின் கேள்விக்கு இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் குளிர்பதனக் கிடங்கு வசதிகள் குறித்து, மாநிலங்கவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்வியும் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் அளித்த விளக்கமும்:

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர், கீழ்க்காணும் வினாக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?

*அழுகும் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்க, தமிழ்நாட்டில் எத்தனை குளிர்பதனக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன?

* மாவட்ட அளவில் இத்தகைய குளிர்பதனக் கூடங்கள் பற்றாக்குறை இருக்கின்றதா?

* அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள்;

* புதிய குளிர்பதனக் கூடங்கள் அமைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இதற்கு பதிலளித்த உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ராமேஸ்வர், எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கம்:

“1.45 மெட்ரிக் டன் திறன் உள்ள குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதற்காக, 62 திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது.

வேளாண் துறையின், ஒருங்கிணைந்த தோட்ட வளர்ச்சித் திட்டம் (MIDH) மற்றும் பிரதமரின் உழவர்கள் நலத்திட்டங்களின் கீழ், உணவு பதப்படுத்துதல் துறை, 2014 முதல் 2021 வரை, இந்தத் திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றது.

முழுமையும் அரசுப் பொறுப்பில், இத்தகைய குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது இல்லை. தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர்களின் தேவைக்கு ஏற்றவாறு, குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன.

தொழில் முனைவோர் மற்றும் அதற்கான உதவிகளைச் செய்பவர்களிடம் இருந்து, புதிய குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கும் திட்டங்களை அரசு வரவேற்கின்றது; தேவையான உதவிகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றது”.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x