Last Updated : 15 Feb, 2021 03:12 AM

 

Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

தகுதியிருந்தும் தாமதமாக வழங்கப்பட்ட கடனால் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையை இழந்த நடுவச்சேரி விவசாயிகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதில் கடந்த ஜனவரி 31-ம் தேதிக்கு முன்பாக பெறப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழங்கப்பட வேண்டிய பயிர்க்கடன், விவசாய நகை அடமானக்கடன் போன்றவை பல விவசாயிகளுக்கு தாமதமாக பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டதாகவும், சிலருக்கு இதுவரை வழங்கபடவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடன் தாமதமாக கிடைத்த விவசாயிகள், கடன் கிடைக்காத விவசாயிகளும், முதல்வரின் தள்ளுபடி அறிவிப்பின் கீழ் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடுவச்சேரி விவசாயிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

நடுவச்சேரி கூட்டுறவு சங்கத்தில் நிலவிய நிர்வாக குளறுபடி காரணமாக விவசாயிகளுக்கான கடன் வழங்கும் கோப்புகளில் தேக்கம் ஏற்பட்டு இந்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக பயிர்க்கடன் வாங்கியவர்களில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் மட்டுமேதள்ளுபடி திட்டத்தின் கீழ் பயனடைவர். நிர்வாக குளறுபடியால் தாமதமாக கடன் பெற்ற சுமார் ரூ.1.5 கோடி வரை பயிர்க்கடன் உள்ள 2 பங்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்,இணைப்பதிவாளர் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளோம்.

முதல்வர் அறிவிப்பின்படி கே.840 நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். டிசம்பர் மாதம் பயிர்க்கடனை செலுத்திய நிலையில், பிறகு இரண்டு மாதம் காலதாமதமாக செயல்பட்டு உரிய நேரத்தில் பயிர்க்கடனை வழங்காமல் இழுத்தடித்த சங்க ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நடுவச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துசாமியிடம் கேட்டபோது, ‘‘கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றால் குறிப்பிட்ட தேதியில் அதை திரும்பச் செலுத்த வேண்டும். திரும்ப செலுத்திய நாளில் இருந்து15 முதல் 20 நாட்களில் அடுத்த கடன் வழங்கப்படும். சங்க விதிகளுக்கு உட்பட்டே அனைவருக்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி மாதத்தில் சங்க செயலாளருக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பொங்கல் விடுமுறையும் வந்ததால், சிலருக்கு கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் அடுத்து வந்த நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து பிப்ரவரி 1-ம் தேதி பலருக்கும் கடன் வழங்கப்பட்டு விட்டது. 3 குழுக்களுக்கு கடன்தயாராகி வருகிறது. தள்ளுபடி சலுகையை இழந்த விவசாயிகளுக்கு, சலுகையை பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x