Last Updated : 14 Feb, 2021 04:51 PM

 

Published : 14 Feb 2021 04:51 PM
Last Updated : 14 Feb 2021 04:51 PM

புதுச்சேரியில் புதிதாக 8 பேருக்கு கரோனா: ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (பிப்.14) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,930 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 5, காரைக்கால் - 1, மாஹே - 2 என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒற்றை இலக்க எண்ணுக்கு கரோனா குறைந்துள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பில்லை.

மேலும், இன்றைய தினம் புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண் தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 448 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 111 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 147 பேர் என மொத்தம் 258 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 533 (97.68 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 6 ஆயிரத்து 413 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5 லட்சத்து 62 ஆயிரத்து 583 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், மருத்துவப் பணியாளர்கள் 5,644 பேர், முன்களப் பணியாளர்கள் 309 பேர் என மொத்தம் 5,953 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x