Published : 14 Feb 2021 10:16 AM
Last Updated : 14 Feb 2021 10:16 AM

தமிழகத்தில் ரூ.1,264.51 கோடி மதிப்பீட்டில் 57 திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் 

சென்னை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள், படுகை அணைகள், கால்வாய்கள், நீரொழுங்கிகள், நீர்செறிவூட்டும் கட்டுமானங்கள், கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் ஆகியவற்றை அமைத்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் ஆகிய 1,264 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு;

''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சின்னாற்றிலிருந்து கிடைக்கப்பெறும் உபரி நீரை ஜெர்தலாவ் கால்வாய் நெடுகை 5 கிலோ மீட்டரில் 30 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைத்து, எர்னஹள்ளி ஏரி, புலிக்கரை ஏரி மற்றும் இதர 12 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம்; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு நீர்வழங்க பெண்ணையாற்றின் குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து வலதுபுறம் 8.80 கிலோ மீட்டரில் 56 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒரு புதிய பிரதான வழங்கு கால்வாய்; கிருஷ்ணகிரி வட்டம், எண்ணேகொல் அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறத்திலிருந்து 233 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணையாற்றில் இருந்து வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீரை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்கும் திட்டம், என மொத்தம் 320 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், இலுப்பூர் கிராமத்தின் அருகே நகரியாற்றின் குறுக்கே 17 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அருகில்பாடி கிராமத்தின் அருகே கள்ளாற்றின் குறுக்கே 5 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தளமட்டச் சுவர்; செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், செம்பூண்டி கிராமத்தின் அருகே கிளியாற்றின் குறுக்கே 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, தாம்பரம் வட்டம், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில், மதுரபாக்கம் ஓடையின் குறுக்கே 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு படுகை அணை மற்றும் வெள்ள நீரொழுங்கி, செங்கல்பட்டு வட்டத்தில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், வண்ணாந்துறை கிராமத்தின் அருகே கானாற்றின் குறுக்கே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் கிராமத்தின் அருகே நல்லாவூர் ஆற்றின் குறுக்கே 3 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி நீர்செறிவூட்டு கட்டுமானம், செஞ்சி வட்டம், மேல்சித்தாமூர் கிராமத்தின் அருகே தொண்டியாற்றின் குறுக்கே 2 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டுமானம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையின் கட்டுமானங்களில் 42 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு பணி, செஞ்சி, விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் வட்டங்களில் நந்தன் கால்வாய் தொலைகல் 12.40 கி.மீ. முதல் 37.88 கி.மீ. வரை 26 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள கால்வாய் மேம்படுத்தும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெருமாள் ஏரியின் கொள்ளளவினை
119 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, விருதாச்சலம் வட்டம், பெருந்துறை கிராமத்தின் அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, பண்ருட்டி வட்டம், சிறுவாத்தூர் கிராமத்தின் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, சிதம்பரம் வட்டம், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் 14 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர்; ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், ஜம்பை கிராமத்தின் அருகே பவானி ஆற்றின் குறுக்கே 13 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் குறுக்கே 79 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 7 தொடர் தடுப்பணைகள்; கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தின் அருகே அமைந்துள்ள கட்டளை கதவணையின் கட்டமைப்புகளை 185 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சூலக்கல் ஆற்றின் குறுக்கே 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடர் தடுப்பணைகள், கோரை ஆற்றின் குறுக்கே 8 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடர் தடுப்பணைகள், ஆச்சிபட்டி ஓடையின் குறுக்கே 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தடுப்பணைகள், கோதவாடி ஓடையின் குறுக்கே 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை மற்றும் புரவிபாளையம் கிராமத்தின் அருகே சோளசுலஹள்ளி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், வாகதொழுவு கிராமத்தின் அருகே உப்புப்பள்ளம் ஓடையின் குறுக்கே 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை மற்றும் உடுமலைப்பேட்டை வட்டம், சமமட்டக் கால்வாயின் விடுபட்டுள்ள பகுதிகளை 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஜவ்வாதுபட்டி கிராமத்தின் அருகே நங்காஞ்சியாற்றின் குறுக்கே 1 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தேத்தூர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே 4 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை மற்றும் முசிறி வட்டம், பேரூர் கிராமத்தின் அருகே அய்யாறு ஆற்றின் குறுக்கே 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், இராஜாமடம் கிராமத்தின் அருகே அக்னியாறு ஆற்றின் குறுக்கே 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை மற்றும் பொன்னவராயன்கோட்டை கிராமத்தின் அருகே நசுவினி ஆற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், காளமநல்லூர் கிராமத்தின் அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே 7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கடைமடை நீரொழுங்கி மற்றும் குத்தாலம் வட்டம், திருவாவாடுதுறை கிராமத்தின் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு படுகை அணைக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மங்கலம் கிராமத்தின் அருகே வெள்ளாச்சி ஓடையின் இடது கரையில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்புச்சுவர்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், சோலைதேவன்பட்டி கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தின் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, உத்தமபாளையம் வட்டம்,
18-ஆம் கால்வாயில் நெடுகை 0.00 கி.மீ. முதல் 20.00 கி.மீ. வரை 59 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி, போடிநாயக்கனூர் வட்டம், 18-ஆம் நீட்டிப்புக் கால்வாயில் நெடுகை 7.00 கி.மீ. முதல் 14.00 கி.மீ. வரை 19 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி மற்றும் 18-ஆம் நீட்டிப்புக் கால்வாயில் நெடுகை 0.00 கி.மீ. முதல் 7.00 கி.மீ. வரை 19 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அப்பநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே வைப்பாற்றின் குறுக்கே 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை; தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமத்தின் அருகே கோட்டமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, சிந்தாமணி கிராமம், தாருகாபுரம் சிறுகுளம் மற்றும் அதன் தொடர்ச்சியாக உள்ள குளங்களுக்கு நீர் வழங்குவதற்கு கோட்டமலையாற்றின் குறுக்கே 2 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அணைக்கட்டு, சிவகிரி வட்டம், இராயகிரி கிராமத்தில் மேல்கரிசல் குளத்திற்கு நீர் வழங்க உள்ளாற்றின் குறுக்கே 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு அணைக்கட்டு மற்றும் கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமத்தில் வண்ணனேரிகுளம் மற்றும் சகலனேரிகுளத்திற்கு நீர் வழங்க கோட்டமலையாற்றின் குறுக்கே 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பிரிவு அணைக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், ஆழ்வார்தோப்பு மற்றும் ஆழ்வார்திருநகரி கிராமங்களுக்கிடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 25 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை, திருச்செந்தூர் வட்டம், புன்ணைக்காயல் மற்றும் சேந்தமங்கலம் கிராமங்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமங்களில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதிக்கு முன்பாக 46 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தடுப்பணைகள்; கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், தாமரைக்குளம் கிராமத்தின் அருகே பழையாற்றின் குறுக்கே 5 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை மற்றும் கிள்ளியூர் வட்டம், ஹலன் காலனியில் வீடுகள் மற்றும் கல்லறைத்தோட்டத்தை பாதுகாக்க 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கடலரிப்புத் தடுப்புச் சுவர் என மொத்தம் 1,264 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x