Published : 13 Feb 2021 07:03 PM
Last Updated : 13 Feb 2021 07:03 PM

தமிழ் கற்றுக் கொடுக்க கோரிக்கை வைத்தால் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு ஏன் கோபம் வருகிறது? - டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்

டி.கே.எஸ்.இளங்கோவன்: கோப்புப்படம்

சென்னை

ஊழலில் இருந்து தப்பிக்க திமுக எம்.பி-க்கள் மீது ஆதாரமற்ற பழி போடுவதா என, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை திமுக செய்தி தொடர்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (பிப். 13) வெளியிட்ட அறிக்கை:

"திமுகவை விமர்சிப்பதாக எண்ணிக் கொண்டு உளறல் அமைச்சர்களில் ஒருவரான கடம்பூர் ராஜூ பல தவறான தகவல்களை தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், காப்பி குடித்தார் என்றெல்லாம் பொய்களை அள்ளி விட்ட கூட்டம் இன்று எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது அவர் இறந்து விட்டார் என்று கூறி திமுக வாக்கு கேட்டது என்று உண்மைக்கு மாறாக கூறியிருக்கிறார். எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டார் என்று சொல்லி எப்படி வாக்குக் கேட்க முடியும்? பொய்யைச் சொல்வதில்கூட ஒரு பொருத்தம் வேண்டாமா?

டி.கே.எஸ்.இளங்கோவன்: கோப்புப்படம்

தலைவர் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் ஏறத்தாழ 1940-களின் இறுதியில் தொடங்கி 1972 வரை நட்பு நீடித்தது. கருணாநிதி கதை வசனத்தில், தயாரிப்பில் எம்ஜிஆர் பல படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர் என் பெரியப்பா என்று தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது எப்படி தவறாகும். எம்ஜிஆரை சுவரொட்டியில் பார்த்தவரெல்லாம் எம்ஜிஆருக்கு உரிமை கொண்டாடும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று திமுக மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கடம்பூர் ராஜூவுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டது. ஆண்டைகளைக் குறை கூறினால் அடிமைகளுக்குக் கோபம் வரத்தானே செய்யும்.

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்மொழிப் பாடம் கற்றுத்தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் கொடுத்தால் கடம்பூர் ராஜூவுக்கு ஏன் கோபம் வருகிறது? அந்த அளவுக்கா தமிழ்மொழி மேல் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் சார்பில் 24 பேர் மக்களவையிலும் 7 பேர் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மக்களவையில் 14 பேரும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

திமுகவின் 31 உறுப்பினர்கள் 310 பேருக்குத்தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை செய்ய முடியும். 45 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் இடம்பெற வேண்டுமென்று திமுக கோரிக்கை வைத்தால் கடம்பூர் ராஜூ 310 பேர் பற்றிப் பேசி தனது அவசர புத்தியையும் அறியாமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். பணம் வாங்குவது என்பது அதிமுகவின் ஒரே கொள்கை. அவர் கட்சி எம்.பி-க்களுக்கு பழக்கம். எந்தத் திட்டம் அறிவித்தாலும் அந்தத் திட்டத்தில் எவ்வளவு கமிஷன் வரும் என்று கணக்குப் போட்டே திட்டத்தை அதிமுக அமைச்சர்கள் அறிவிப்பார்கள்.

தமிழகத்தையே சுரண்டிக் கொள்ளையடித்த கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்துக்கு திமுகவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

தமிழக மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று சொன்னால் அதனை எதிர்க்கும் கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்தை தமிழக மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

நாவடக்கம் தேவை. நீங்கள் அடித்த கொள்ளைகள் குறித்த விவரம் மத்திய அரசுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்கள் வேண்டுமானால் பாஜகவுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கலாம் ஆனால், திமுக தமிழையும் தமிழரையும் காப்பாற்றுவதற்காக உருவான இயக்கம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x